(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை மாத்திரமல்லாது உலகின் பல நாடுகள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்தன. எமது நாட்டின் பொருளாதாரமும் அதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது ஓரளவிற்கு அதிலிருந்து மீண்டிருக்கின்றோம். எனினும் அதனால் ஏற்பட்ட ஏனைய சவால்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மனால் 'இலங்கையின் அபிவிருத்தியில் மத்திய வங்கி' என்ற தலைப்பில் வருடாந்த ஞாபகார்த்த உரை நிகழ்த்தப்பட்டது.
அதில் ஆளுநர் மேலும் கூறியதாவது மத்திய வங்கி தாபிக்கப்பட்டு 70 வருட காலத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு இப்போது இந்த நிலையை அடைந்திருக்கிறது.
தற்போது இலங்கை சுயமாகவே தனது அபிவிருத்திக்கான மாதிரித் திட்டத்தை வகுக்கக் கூடிய நிலையிலிருக்கிறது. அதற்கான ஒரு முகவராகவே மத்திய வங்கி செயற்பட்டு வருகின்றது.
மேலும் பொருளாதார, விலை உறுதிப்பாடு மற்றும் நிதிமுறைமை உறுதிப்பாடு ஆகியவற்றைப் பேணுவது மத்திய வங்கியின் பிரதான இலக்குகளாக இருக்கின்றன.
மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சீரான கொள்கை உருவாக்கத்தை நோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை மாத்திரமல்லாது உலகின் பல நாடுகள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்தன.
எமது நாட்டின் பொருளாதாரமும் அதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது ஓரளவிற்கு அதிலிருந்து மீண்டிருக்கின்றோம்.
எனினும் அதனால் ஏற்பட்ட ஏனைய சவால்களை எதிர்கொள்வதற்குத் தயார்நிலையில் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்தியவங்கி தொடர்ந்தும் செயற்திறன் மிக்கவகையில் மேற்கொண்டு வருகின்றது என்றார்.
No comments:
Post a Comment