(இராஜதுரை ஹஷான்)
இறக்குமதி பொருளாதார உற்பத்தியில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். தேசிய உற்பத்திகளை வலுப்படுத்தி தன்னிறைவு பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஹோமாகம - தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வர்த்தகத்துறை வளர்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தையே பொருப்பேற்றுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சுனாமி, 30 வருட கால யுத்தம், உணவு பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட 7 பிரதான பிரச்சினைகள் காணப்பட்டன. அனைத்து நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட காரணத்தினால் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றது. ஆனால் கடந்த ஐந்து வருட காலத்தில் தேசிய உற்பத்திகள் குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.
பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது. டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி அதிகரித்த மட்டத்தில் இருந்தது. இதனால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. புதிய அரசாங்கம் ஆட்சியினை பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் மந்தகதியில் இருந்தது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தேசிய உற்பத்திகளை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சுக்களை வலுப்பிடுத்தினர். 1979.40ம் இலக்க ஏற்றுமதி தொடர்பான சட்ட கோவை முழுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொடர்பான சபையை பயனுடையதாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி உற்பத்திகள் பெருமளவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இறக்குமதி உற்பத்தி துறையில் ஈடுபட்ட வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சேவை, நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணம், வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் ஜே. எம். பி. ஜயவர்தன, ஏற்றுமதி பொருளாதாரம், சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment