ஹோமாகம, தியகம விளையாட்டரங்கு திட்டம் கைவிடப்பட்டது - பிரதமர் மஹிந்த, முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடனான கலந்துரையாடலில் முடிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

ஹோமாகம, தியகம விளையாட்டரங்கு திட்டம் கைவிடப்பட்டது - பிரதமர் மஹிந்த, முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடனான கலந்துரையாடலில் முடிவு

ஹோமகாமா - தியகமவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த, இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டரங்கு திட்டத்தை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே நேற்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இது தொடர்பான உத்தேச காணியை பார்வையிடச் சென்ற அமைச்சர் பந்துல குணவர்தன, குறித்த பகுதியில் இதற்காக 26 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அக்காணியை வழங்கிய ICC யினால் வழங்கப்படும் கடனுதவியில் அதனை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆயினும் இது தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்ததோடு, சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. அத்துடன், தாம் அவ்வாறான எந்தவொரு கடனுதவி தொடர்பிலும் பேசவில்லை என ICC அறிவித்திருந்தது.

இந்நிலையில் பந்துல குணவர்தனவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இதற்கு ICC நிதியுதவி வழங்குவதாகவும், அரச நிதி பயன்படுத்தப்படப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். 

ஆயினும் பந்துல குணவர்தனவின் பிழையான தகவல் காரணமான தனது கருத்துத் தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோருவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றையதினம் (22) முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியுடன் தொடர்புடைய பலரையும் அலரி மாளிகைக்கு அழைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.

இது தொடர்பில் ஆரம்பம் முதல் கருத்துத் தெரிவித்து வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, நாம் இவ்வாறானதொரு திட்டத்தை மேற்கொள்வதிலும் பார்க்க, பாடசாலை மற்றும் முதற்தர போட்டிகளில் விளையாடுவோரை ஊக்குவித்து, அவர்களுக்குரிய உட்கட்டமைப்பு வசதியாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஆடுகளங்களை வழங்குவதன் மூலம் கிரிக்கெட்டை வளர்ப்பது சிறந்தது எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தேசிய அணியில் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் பெரும்பாலான வீரர்கள் பாடசாலை கிரிக்கெட் வீரர்களாக இருந்து களம் கண்டவர்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க, ரொஷான் மஹானாம ஆகியோர் கலந்து கொண்டு, பாடசாலை கிரிக்கெட்டை வளர்ப்பது தொடர்பில் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய, கிரிக்கெட்டுக்கான தேசிய திட்டமொன்றை உருவாக்கவும், பாடசாலை கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டதோடு, ஹோமாகம, தியகம கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பதற்கு பதிலாக ஏனைய விளையாட்டு மைதானங்களின் வசதிகளை மேம்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment