(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஊரடங்குச் சட்டம் காரணமாக வன்னி மாவட்டத்தில் நிர்க்கதிக்குள்ளாகி இருக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது காதர் மஸ்தான் இது தொடர்பாக பிரதமருக்கு எடுத்துரைத்துள்ளார்.
இதன்போது காலவரையின்றி தொடர் ஊரடங்குச் சட்டம் காரணமாக மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு திருப்பியனுப்ப உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் விடுத்த கோரிக்கைக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
மேற்படி நிர்க்கதிக்குள்ளாகி இருப்பவர்கள் அந்த பிரதேச கிராம சேவகர்களுடன் தொடர்புகொண்டு உரிய பத்திரங்களை பூர்த்தி செய்து குறித்த பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்துடன் மருத்துவ சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு, உரிய இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு காதர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment