கொரோனாவிலிருந்து மேலும் இரு கடற்படை வீரர்கள் சுகம் - இதுவரை 04 கடற்படையினர் குணமடைவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

கொரோனாவிலிருந்து மேலும் இரு கடற்படை வீரர்கள் சுகம் - இதுவரை 04 கடற்படையினர் குணமடைவு

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் அகலவத்தை வைத்தியசாலைகளில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பின்னர், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் பூரண குணமடைந்து நேற்று (05) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

விடுமுறையின் பின்னர் இக்கடற்படை வீரர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் அகலவத்தை வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்கள் இருவரும் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். இதன் பின்னர் சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 

அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் இருவருக்கும் சிகிச்சையின்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் அவர்களது உடம்பில் குறித்த வைரஸ் இல்லை என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு விடுமுறையிலிருந்த இக்கடற்படை வீரர்கள் இருவரினதும் குடும்ப உறுப்பினர்கள், கடற்படை வீரர்களின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு, இக்கடற்படை வீரர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய போதிலும், சுகாதார ஆலோசனைக்கு அமைய, மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இக்கடற்படை வீரர்கள் இருவர் உட்பட நான்கு கடற்படை வீரர்கள் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் பூரண சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment