கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும் - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும் - மனோ கணேசன்

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில் முடிவு என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, இன்று காலை கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே அவ்வந்த மாவட்ட, பிரதேச பொது சுகாதார அதிகாரிகள், இவர்களை பொறுப்பேற்று, தத்தமது வீடுகளில் இவர்கள் தனிமை நிலைமையில் இருப்பதை கண்காணிப்பார்கள்.

இவர்களை இவர்களது வீடுகளில் தனிமை நிலையில் வைக்க முடியாவிட்டால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இப்படி கொழும்பில் இருந்து வருகின்ற நபர்களுக்கான "கொரோனா தனிமை நிலையங்கள்" அமைக்கப்பட்டு அங்கே இவர்கள் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ அனுமதியின் பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என நான் இக்கூட்டத்தில் ஆலோசனை கூறினேன்.

வெளிமாவட்ட மக்கள் கொழும்பிலிருந்து வெளியேறுவது, கொழும்பில் சமூக இடைவெளிக்கு இடையூறாக இருக்கின்ற நெருக்கடியையும் தணிக்க உதவும். இது கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு நன்மை தரும் எனவும் நான் இக்கூட்டத்தில் கூறினேன்.

இந்த நபர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைக்கும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும். இதுபற்றி இன்று நடக்கும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பிரஸ்தாபித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார். எக்காரணம் கொண்டும் இந்நடவடிக்கை தாமதாமாகும் பட்சத்தில் இந்த பிரிவினருக்கு கொழும்பிலே வாழ்வதற்கான வாழ்வாதார உதவிகள் அரசால் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.

கொழும்பு மாவட்ட முன்னாள் எம்பீக்களும், மாவட்ட செயலாளர் தலைமையில் அனைத்து பிரதேச செயலாளர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்ட இந்த ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் போது, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மாவட்ட செயலாளர் சமர்பிப்பார்.

No comments:

Post a Comment