முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களால் நில மீட்பு கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 1, 2020

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களால் நில மீட்பு கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் ஆரம்பிக்கபட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கேப்பாபுலவு மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் நிலங்களில் அமைக்கபட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் "எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே எமது நிலத்தை விட்டு வெளியேறு" சொந்த நிலமிழந்து வாழும் அகதிகள் நாம்? எமக்கு மாற்று காணிகள் வேண்டாம், சர்வதேசமே கேப்பாபுலவு மக்களை திரும்பி பார், போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி எமது கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களால், இராணுவம் அபகரித்து வைத்துள்ள எமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு தெரிவித்து கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பிரதான நுழைவாயில் முன்பாக தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த போராட்டத்தின் பயனாக இரண்டு கட்டங்களாக கேப்பாபுலவில் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீதமாக பாடசாலைகள், ஆலயங்கள், விளையாட்டு மைதானம், பொது மண்டபங்கள், மக்கள் வீடுகள் நிலங்கள் என்பன இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் அங்கு தொடர்ந்தும் படையினர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தை அமைத்து நிலைகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மீதமாகவுள்ள 54 குடும்பங்களுக்குச் சொந்தமான 71 ஏக்கர் தமது சொந்த நிலங்களை படையினர் விட்டு வெளியேறி நாம் வாழ வழி செய்ய வேண்டும். சொந்த நிலங்கள் இல்லாத நிலையில் நாம் சொல்லணா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். எமது காணிகளில் உள்ள வருமானங்களை படையினர் அனுபவித்துக் கொண்டு எம்மை நடுத்தெருவில் விட்டுள்ளனர். 

புதிய ஜனாதிபதி வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்து சேவை செய்வேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் இன்னும் கேப்பாபுலவு மக்கள் சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாது வீதியில் இருந்து போராடும் நிலையே காணப்படுகின்றது. 
எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, ஜனாதிபதி கேப்பாபுலவு மக்களின் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் சர்வதேசம் இனியும் தாமதியாது கேப்பாபுலவு மக்களின் இந்த துயரை துடைக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், பிரதேச சபை உறுப்பினர்களான லோகேஸ்வரன், குகனேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களின் போராட்டம் இடம்பெறுகின்ற நிலையில் அங்கு பொலிஸார் மற்றும் அரச, இராணுவ புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment