கல்முனை விடயத்தில் தமிழர்களுடன் பேசித்தான் தீர்வு காணப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சொல்வது வேடிக்கையாக உள்ளது. அப்படியென்றால் இவ்வளவு காலமும் ஏன் இதனை பேசித் தீர்க்கவில்லை? என உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் முஸ்லிம் ஸ்ரீ லங்கா காங்கிரஸ் 5 வருடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமக்கு முதலமைச்சர் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் என பேசி சொகுசுகளை அனுபவிக்க முடியுமாயின் ஏன் இந்த விடயத்தை பேச முடியாமல் போனது?
உண்மையில் கல்முனை பிரச்சினையை தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து மிக இலகுவாக தீர்க்க முடியும். ஆனாலும் இதனை தீர்க்க முஸ்லிம் காங்கிரசும், கூட்டமைப்பும் முன் வராது. காரணம் இந்த விடயம்தான் முஸ்லிம்களை உசுப்பேத்த முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழர்களை உசுப்பேத்த தமிழ் கூட்டமைப்புக்கும் உள்ள மிக முக்கிய இரையாகும்.
கடந்த 52 நாள் பிரச்சினையின் போது முஸ்லிம் காங்கிரசும், கூட்டமைப்பும் இணைந்து ரணிலை காப்பாற்ற முணைந்தவர்கள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஏன் இது விடயத்தில் வெளிப்படையாக பேசி தீர்வு ஒன்றை எழுத முடியாது?
இனியாவது இது விடயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் நேரடியாக பேச வேண்டும். கல்முனை உப பிரதேச செயலகத்தை ரத்து செய்து விட்டு பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களை இணைத்து பாண்டிருப்பு செயலகம் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு செயலகம் வழங்கும் படி முஸ்லிம் காங்கிரசும், கூட்டமைப்பும் இணைந்து ஜனாதிபதியிடம் பிரேரணை முன் வைத்தால் இப்பிரச்சினையை இலகுவாக தீர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment