எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் 23வது சபை அமர்வில் குழப்ப நிலைமை மற்றும் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தமை காரணமாக சபையின் அமர்வு நிறைவு பெற்றது.
ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் 23வது சபை அமர்வு சபையின் சபா மண்டபத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
பிராந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு சபை அமர்வில் செய்தி சேகரிக்க அனுமதி வழங்குமாறு சபை உறுப்பினர் எம்.அன்வர் தெரிவித்த கருத்தின் காரணமாக சபை அமர்வில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.
குறித்த பிராந்திய ஊடகவியலாளர் அண்மைக் காலமாக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் கடந்த காலத்தில் சபை அமர்வில் செய்தி சேகரிக்க அனுமதி வழங்க முடியாது என சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காணப்பட்டது.
அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த பிராந்திய ஊடகவியலாளரை கட்டாயம் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரியதற்கிணங்க சபையின் தீர்மானத்தினை மீற முடியாது மீண்டும் ஒரு முறை வாக்கெடுப்பு மூலம் அனுமதியினை பெறுவதற்கு சந்தர்ப்பத்தினை வழங்குவதாக தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார்.
இந்த நிலையில் வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் ஆதரவாக ஆறு வாக்கும், எதிராக ஏழு வாக்குகளும், நடுநிலையாக இரண்டு வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில் குறித்த பிராந்திய ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க அனுமதிக்க முடியாது என்று சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க வாக்ககெடுப்பு எடுத்த விடயம் தவறு என்றும், இதனை வன்மையாக கண்டிப்பதாக கூறி, அடுத்த அமர்வுக்கு குறித்த ஊடகவியலாளரை யார் எதிர்த்தாலும் கொண்டு வருவோம் என்று கூறி சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன், எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் இல்லாத சமயத்தில் குறித்த ஊடகவியலாளரை சபை மண்டபத்தினுள் அழைத்து வந்து தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். இந்த நிலையில் தவிசாளர் சபை அமர்வு நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment