காசா யுத்தத்தை நிறுத்த திரண்ட இஸ்ரேல் மக்கள் : தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி - News View

About Us

About Us

Breaking

Monday, August 18, 2025

காசா யுத்தத்தை நிறுத்த திரண்ட இஸ்ரேல் மக்கள் : தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

காசா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி, ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல் அவிவில் பணயக் கைதிகள் சதுக்கம் என அழைக்கப்படும் பகுதியில் நேற்று (17) பாரிய இஸ்ரேலிய கொடி ஒன்றுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.

டெல் அவிவ் மற்றும் ஜெரூசலத்தை இணைக்கும் பிரதான பாதை உட்பட பல வீதிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியுள்ளனர். இதன்போது அவர்கள் டயர்களையும் தீவைத்துள்ளனர். 
இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், உடனடி போர் நிறுத்தத்தையும், காசாவில் நடைபெறும் மனிதாபிமான சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் “இனி போர் வேண்டாம்” எனும் வாசகங்களைக் கொண்ட பதாகைகள் ஏந்தியவாறு வீதிகளில் பேரணியாக திரண்டனர்.

இஸ்ரேல் அரசு மீது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகக்குழுக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
விமர்சகர்கள், காசா யுத்தம் தொடர்ந்து நடைபெறுவது இஸ்ரேல் சமூகத்துக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

காசா நகரை கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ள இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கை காரணமாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள பணயக் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் இணைந்த அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காசாவிற்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதால், அங்கு பட்டினி மற்றும் போசணைக் குறைபாடுகள் காரணமாக நூற்றுக் கணக்கானோர் மரணிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment