யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது நாளை (18) வடக்கு கிழக்கில் நடத்தப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காது என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.
தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்காது என தெரிவித்துள்ள அவர், ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் அது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு எதுவுமில்லாமல் ஒரு கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொண்டு அதற்கு ஆதரவு கோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியம் என்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எம்மிடம் மாற்றுக் கருத்து கிடையாது..
கடந்த காலங்களில் தமிழ் மக்களது உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாம் குரல் கொடுத்தமை அனைவரும் அறிந்ததே.
ஆனால் ஒரு சில தரப்பு தமது சுயலாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களை கையில் எடுத்து அரசியல் செய்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் அதற்கு துணை போகவும் மாட்டோம்.
மேலும் பல்கலைக்கழகத்தில் இன்றைய நாள் பாடநேர அட்டவணைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாடங்கள் உரிய நேர அட்டவணையின்படி முறையாக நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போல கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment