பல சாதனைகள் புரிந்த இளைஞன் படுகொலை : மோப்பநாய் சகிதம் கொலையாளியை தேடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 9, 2025

பல சாதனைகள் புரிந்த இளைஞன் படுகொலை : மோப்பநாய் சகிதம் கொலையாளியை தேடும் பொலிஸார்

முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குத் தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து 300 மீற்றர் தொலைவில், கொக்குத் தொடுவாய் களப்பு கடலில் நேற்றுமுன்தினம் (07) இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் நேற்று (08) அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்னால் துரத்தி வந்த சிலர் கொக்குத் தொடுவாய் களப்பு கடற்கரையிலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஒருவர் தொழிலுக்கு செல்லும்போது குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

அப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாகையால் யானை அடித்து விட்டதோ என நினைத்து குறித்த இளைஞனின் தந்தையையும், கிராம அபிவிருத்தி சங்க தலைவரையும் விரைந்து அவ்விடத்திற்கு கூட்டி வந்து பார்த்தபோதே இளைஞனின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளமை தெரியவந்ததுள்ளது.

பின்னர் கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தீவிர விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சடலத்தை பார்வையிட்டு மோப்பநாய் சகிதம் சோதனையை மேற்கொள்ளுமாறும், கைவிரல் அடையாளத்தை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் , உடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மோப்ப நாய் சகிதம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு குறித்த இளைஞனின் அத்தானை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் கொக்குத் தொடுவாய் வடக்கைச் சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் என்ற 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் சிறந்த மரதனோட்ட வீரனாவார். வட மாகாணத்தில் பல சாதனைகளை கடந்த காலங்களில் பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞன் யாரால் கொலை செய்யப்பட்டார், என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வவருகின்றனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

No comments:

Post a Comment