(இராஜதுரை ஹஷான்)
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளதாக அறியமுடிகிறது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் சட்ட சிக்கல் காணப்படுவதால் சட்ட ஆலோசனைகள் கிடைக்கும் வரையில் நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்காமலிருக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கடந்த 12 ஆம் திகதி முன்வைத்தன.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அருண ஜயசேகர கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டமை குறித்த குற்றச்சாட்டில் பிரதானவொன்றாக கருதப்படுகிறது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரனவின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயதானங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படாத நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு சட்ட இயலுமை கிடையாது என்று ஆளும் தரப்பின் பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே இது பழிவாங்கும் பிரேரணை என்று ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவில்லை என்றும் ஆளும் தரப்பினர்கள் பாராளுமன்ற சந்திப்புக்களின் போது குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment