வடக்கு காசாவில் உள்ள ஒரே ஒரு சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை இஸ்ரேல் தாக்கி அழித்திருப்பதோடு அமெரிக்க ஆதரவு உதவி விநியோக நிலையங்களுக்கு அருகே வன்முறைகள் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 54 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இவர்களில் ரபாவில் உதவி விநியோக நிலையத்திற்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 31 பேரும் அடங்குவதாக அது குறிப்பிட்டது.
உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை சூடு நடத்தியதை அடுத்து அங்கு பெரும் குழப்பம் நிலவியதாக பார்த்தவர்கள் மற்றும் அவரச மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது ஆளில்லா விமானங்கள், டாங்கிகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சூடு நடத்தப்பட்டதாக கான் யூனிஸ் நகரின் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் காயமடைந்தவர்கள் குறிப்பிட்டதாக எல்லைகளற்ற மருத்தவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் ஐ.நா. அமைப்பின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்படும் உதவி விநியோகத்திற்கு மாற்றாகவே அமெரிக்கா ஆதரவுடன் காசா மனிதாபிமான நிறுவனத்தின் உதவி விநியோகம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இஸ்ரேலின் செல்வாக்குடன் முன்னெடுக்கப்படும் இந்த உதவி விநியோகத்திற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியாகி வருகின்றன. இந்த உதவி விநியோகத் தளங்களை ஒட்டிய வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
இந்த உதவி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட மறுத்து வரும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம், ‘காசாவில் உதவி விநியோகம் மரண பொறியாக மாறியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றுக் காலையிலும் தெற்கு காசாவின் ரபாவில் உள்ள இந்த உதவி விநியோக நிலையத்திற்கு உதவி பெறுவதற்கு சென்றுகொண்டிருந்த மூன்று பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படையினரால்கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அனடொலு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காசாவுக்கான அனைத்து உதவி விநியோகங்களையும் இஸ்ரேல் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் முடக்கி வரும் நிலையில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பதோடு மக்கள் பட்டினியில் தவிப்பதாக தொண்டு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க ஆதரவு உதவி விநியோக நிலையங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டிருக்கும் பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்திருப்பதோடு குறைந்தது 340 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் அமைந்துள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான நூர் அல் காஃபி இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை இஸ்ரேலியப் படை தாக்கி அழித்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்ச தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய மருத்துவமனையின் ஓர் அங்கமாக இருக்கும் இந்த நிலையம் வடக்கு காசாவில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான ஒரே சிகிச்சை நிலையமாக இருப்பதோடு இங்கு 160இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் உயிர் காக்கும் சிகிச்சையை பெற்றுவருவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முந்தைய தாக்குதல் ஒன்றில் இந்த நிலையம் சேதத்திற்கு உள்ளாகி அது திருத்தப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு சில வாரங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மறுபுறம் கான் யூனிஸுக்கு அருகே அல் மவாசியில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசிக்கும் கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் மவாசியை இஸ்ரேல் மனிதாபிமான வலயமாக அறிவித்தபோதும் அங்கு அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான வெளியேற்ற உத்தரவுகளால் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் பகுதிக்கு சுருங்கி உள்ளனர். இங்கு நெருங்கிய இடைவெளியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் நடத்தப்படும் தாக்குதல்களில் பல கூடாரங்களும் தீப்பற்றுவதோடு பெரும் உயிர்சேதங்கள் இடம்பெறுகின்றன.
போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அமெரிக்க விசேட தூதுவரான ஸ்டீவன் விட்கொப்பின் போர் நிறுத்தத் திட்டத்தில் ஹமாஸ் அமைப்பு திருத்தங்களை கோரிய நிலையில் அதனை அமெரிக்க தரப்பு நிராகரித்திருந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 60 நாள் விரைவான தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர். காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் வகையிலேயே இந்த தற்காலிக போர் நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
என்றபோதும் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு அமைந்தாலும் இராணுவ நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment