(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வழக்குத் தாக்கல் செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ள கருத்து ஆணைக்குழுவை அவமதிப்பதாகும். ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படும்போது ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள். விமல் வீரவன்சவுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவில் வலியுறுத்தியுள்ளோம் என இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமல் துஷார தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை (30) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிலையில் ஊழல்வாதிகள் பலர் தற்போது கலக்கமடைந்து ஆணைக்குழுவிற்கும், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கும் எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச 'இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியை சந்தித்து யாருக்கு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசனை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து சுயாதீன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதிப்பதாகும்.
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 118 ஆவது பிரிவில் 'இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் வெளியாட்கள் தலையிடுவதும், ஆணைக்குழுவை அவமதிப்பதும் குற்றச் செயலாக கருதப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கருத்து ஆணைக்குழுவை அவமதிப்பதாகவும் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆகவே இவரது கருத்துக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம்.
ஆட்சியில் இருக்கும்போது அரச அனுசரணையுடன் அரச நிதியை மோசடி செய்த ஊழல்வாதிகள் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். சுயாதீன ஆணைக்குழு ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊழல் இலஞ்ச மோசடியால்தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment