அரசாங்க மருத்துவமனைகளில் அதிநவீன கதிர்வீச்சு இயந்திரங்கள் : இரண்டாம் கட்ட ஒப்பந்தம் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

அரசாங்க மருத்துவமனைகளில் அதிநவீன கதிர்வீச்சு இயந்திரங்கள் : இரண்டாம் கட்ட ஒப்பந்தம் கைச்சாத்து

புற்றுநோயை தனி மனித அவலமாக கருதாமல் முழு நாட்டுக்கும் சவாலாக கருதுவதே சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தின் இலக்காகுமென சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை உபகரணங்களை நிறுவும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர்  திங்கட்கிழமை (20) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தொற்றா நோய்களுக்கு மத்தியில் புற்றுநோய் பரவுவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்த்து சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல், வலுவாக நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல நடைமுறைத் திட்டங்களை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தி உள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் பல மாகாணங்களை உள்ளடக்கிய ஐந்து மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து, அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை கருவிகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.இதன் மூலம், நோயாளி தனது பகுதிக்கு அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து அதே சிகிச்சையைப் பெறமுடியும்.

இலங்கையில் இத்திட்டம் இரண்டு கட்டங்களாக அமுல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக ஒன்பது வைத்தியசாலைகளில் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை உபகரணங்களை (Liner Accelerator Machines) நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் ஐந்து இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. ஒட்டுமொத்த திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அரச மருத்துவமனை கட்டமைப்பில் 14 இயந்திரங்கள் நிறுவப்படும் .

வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை, வடமேற்கு மாகாணத்தை உள்ளடக்கி குருநாகல் போதனா வைத்தியசாலை, ஊவா மாகாணத்தை உள்ளடக்கி பதுளை போதனா வைத்தியசாலை, தென் மாகாணம் மற்றும் கிழக்கு பிராந்தியத்தை உள்ளடக்கி ஹம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலை, சப்ரகமுவ மாகாணத்தை உள்ளடக்கி இரத்தினபுரி போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களில் இயந்திரங்களை அமைக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டத்துக்கு 16 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்துக்கு முதலீடு செய்யப்பட்ட தொகை 13 மில்லியன் அமெரிக்க டொலராகும். முழு திட்டத்துக்கான முதலீடு 29 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Elekta UK இன் மூலோபாய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் குந்தல் பத்ரா மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோருக்கு இடையில் திங்கட்கிழமை (20) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரி, அரசாங்க மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கம் மற்றும் கதிரியக்க தொழினுட்பவியலாளர்களின் சங்கம் ஆகியவை இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தமது கூட்டு நிபுணத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வழங்கியுள்ளன.

No comments:

Post a Comment