தற்பாதுகாப்புக்காக அதிகபட்சமாக ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
துப்பாக்கிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்பாதுகாப்புக்காக தனி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களை, எண்ணிக்கை சரி பார்ப்புக்காக மீளச் சமர்ப்பிப்பதற்கு கடந்த மாதம் 21 ஆம் திகதி வரை பாதுகாப்பு அமைச்சு கால அவகாசம் வழங்கியிருந்தது.
துப்பாக்கி வழங்கல் தொடர்பில் மேன்முறையீடு செய்யப்படாத மற்றும் உரிய திகதியில் கையளிக்கப்படாத துப்பாக்கிகள் சட்டவிரோதத் துப்பாக்கிகளாகக் கருதப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நபரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து ஆய்வு நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்படும் உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே மேலும் துப்பாக்கிகளை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு பாதுகாப்பு அமைச்சிடம்தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினால் இந்த பாதுகாப்பு ஆய்வு முன்னெடுக்கப்படும். துப்பாக்கி உரிமையாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்களிடமுள்ள துப்பாக்கிகளை மீளப் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்களுக்கு 1500 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில நபர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment