(எம்.மனோசித்ரா)
மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, அதன் பின்னர் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றபோது இலங்கை மின்சார சபையில் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தில் பாரிய தொகை செலவிடப்பட்டிருந்தது.
எனவே தற்போது மின் கட்டணத்தை அதிகரிக்காமல் பேணுவதற்கான நடவடிக்கைகளையே மின்சார சபை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவோம். அதேவேளை மின்சார சபை ஊழியர்களுக்கு எவ்வித விசேட கொடுப்பனவையும் வழங்காமலிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம். கடந்த அரசாங்கத்தால் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணம் தொடர்பான தரவினை அடிப்படையாகக் கொண்டே நாம் அந்த கருத்தினை முன்வைத்தோம் என்றார்.
No comments:
Post a Comment