அண்மைக் காலத்தில் இடம்பெற்ற தவறான சில நடவடிக்கைகளால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியினரால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கின்றோம்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்துச் செய்ய வேண்டும்.
தனி மனிதனிடம் அனைத்து அதிகாரங்களும் குவிந்து காணப்படுமானால் அங்கு நாட்டினது நலனைப் பாதிக்கும் தன்னிச்சையான நடவடிக்கைகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
இதற்கு கடந்த வருடத்தின் இறுதியில் நாட்டில் இடம்பெற்ற குழப்ப நிலையே சிறந்த உதாரணம். எமது நாட்டின் வரலாற்றில் இவ்வாறு அதிகாரத் துஸ்பிரயோகம் இடம்பெற்றதில்லை.
எனவே நாம் நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக நீக்கி நாடாளுமன்றத்தினது பலத்தினை அதிகரிக்கச் செய்ய வேண்டும்” என குமாரவெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment