கோயில்களில் இடம்பெறும் ஊழல் முறையினை ஒழித்து சிறந்த ஜனநாயக பண்பு கொண்ட முறைமையொன்றினை ஏறபடுத்துவதற்கு நாட்டில் பொதுத் தேர்தல் நடத்துவது போல் தேர்தல் முறையொன்று மஸ்கெலியாவில் நேற்று (30) நடைபெற்றது.
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஜனநாயக முறையில் கோயில் நிர்வாகத்தினர் தெரிவு செய்து ஒரு முன்மாதிரியான கோயில் நிர்வாகம் ஒன்றினை ஏற்படுத்துவதற்காக அப்பிரதேசத்தில் வாழும் இளைஞர்கள் பரவுன்லோ கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த ஜனநாயக முறைக்கமைவாக ஊரில் உள்ள கோயில் நிர்வாக தலைவர் பதவிக்கு போட்டியிடுபர்களை வேட்பாளராக நிறுத்தி பொதுமக்கள் தங்கள் விரும்பியவர்களுக்கு ஒன்றிணைந்து வாக்கினை பதிவு செய்தனர்.
இக்கோயில் நிர்வாக தேர்தல் பிரவுன்லோ தோட்டத்தில் மிகவும் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படியும் இடம்பெற்றுள்ளமை முழு மலையகத்துக்கும் எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. குறித்த தேர்தலுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தன.
மூன்று வருடத்திற்கு ஒரு முறை கோயில் யாப்பின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறும். இவ்வாறான முறையை அனைத்து தோட்டப் புறங்களும் பின்பற்றினால் ஊழல் குறைந்து சிறந்த நிர்வாகம் ஏற்பட்டு தமது சமய விழிமிய பண்புகளை பாதுகாப்பது மக்கள் தங்களது வழிபாடுகளையும், சமயம் சார்ந்த ஒழுக்க நெறிமுறைகளையும் உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
சில தோட்டப்புற மற்றுமன்றி நகரப்புற கோயில் நிர்வாகத்தினர் மக்களின் பணத்தை பல வழிகளில் எடுத்து பொதுமக்கள் கோயிலுக்கு வழங்கும் பணத்தை சரியான முறையில் தர்மநெறிகேற்ப செலவு செய்யாததன் காரணமாக பல பிரச்சினைகள் தோன்றி பொலிஸ் நிலையம் வரை சென்ற சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.
எனவே இவ்வாறான ஒரு ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சிறந்ததொரு நிர்வாகக்குழு உருவாகும் என்பது அனைவரினதும் நம்பிக்கையாகும். ஆகவே இதனை அனைத்து தோட்டங்களும் பின்பற்ற வேண்டும் என பிரவுன்லோ மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தேர்தலில் கொவிட் 19 தவிர்க்கும் முகமாக கைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
மலையக நிருபர் சுந்தரலிங்கம்
No comments:
Post a Comment