தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படுமா? : அரசாங்கம் உறுதியாக தெரிவிக்க வேண்டும் என்றார் ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 9, 2025

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படுமா? : அரசாங்கம் உறுதியாக தெரிவிக்க வேண்டும் என்றார் ஜீவன் தொண்டமான்

லோரன்ஸ் செல்வநாயகம்

பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா அதிகரிக்கப்படாதா? என்பதை அரசாங்கம் உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பினார்.

வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிட்டுள்ள போதும் எந்த தோட்டத்திலும் கம்பெனிகள் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குவதில்லை என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல என்பதால் வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா? என்பது தெரியாது என சபையில் குறிப்பிட்ட அவர், பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா அதிகரிக்கப்படாதா? என்பதை அரசாங்கம் உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கலைச்செல்வி எம்பி உரையாற்றும்போது அவர் சொன்ன விடயங்களை வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு கேள்வி கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

”பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளத்தில் முடிந்தால் ரூ. 10 ஆயினும் அதிகரிக்க முடியுமா? என்று ஜனாதிபதியிடம் தெளிவாக நான் குறிப்பிட்டடிருந்தேன். ஜனாதிபதி தனது உரையில் பெருந்தோட்ட மக்களுக்கு ரூ. 1750 வழங்கப்படும் என்றும் அதில் ரூ. 200 அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் அதற்காக ரூ. 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 25 நாட்களுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.

எந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள்? வருகைக்கான கொடுப்பனவாகவே ரூ. 200 வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா என்பதைக் கூற முடியாது. தோட்ட கம்பனியே அதனை தீர்மானிக்க வேண்டும். தொழில் வழங்கல் நாட்கள் எண்ணிக்கை மாற்றமடையலாம்.

பெருந்தோட்ட கம்பனிகள் ரூ. 200 வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெருந்தோட்ட கம்பனிகளின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை ‘ஒரு ரூபாவைக் கூட அதிகரிக்கப் போவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதாயின் அதற்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவேன். 

வீர வசனம் பேசலாம் ஆனால் நடைமுறையில் அவற்றை செயற்படுத்த முடியாது. பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படாதா? என்பதே உறுதியாக அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment