சவூதி அரேபியா அன்பளிப்புச் செய்த புனித அல்குர்ஆன் பிரதிகளை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவித்து மக்களுக்கு வழங்கவென, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறார்.
இதற்கிணங்க அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதல்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்புதல் கடிதத்தை கலாசார அமைச்சிடமும் காதர் மஸ்தான் எம்.பி.ஒப்படைத்துள்ளார்.
சவூதி அரேபியாவின் மன்னர் பஹத் புனித அல்குர்ஆன் அச்சிடல் பணியகத்திலிருந்து இலங்கை வாழ், முஸ்லிம்களுக்காக இந்த குர்ஆன் பிரதிகள் கடந்த 2024 மே மாதம் 16 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அப்போது சுங்கத் திணைக்களம் இந்த புனித அல்குர்ஆன் பிரதிகளை விடுவிக்காமல் தடுத்து வைத்தது. அன்றிலிருந்து இப்புனித பிரதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்த போதும், இதுவரையும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை.
இதனைக் கருத்திற் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
மேற்படி புனித அல்குர்ஆன் பிரதிகளில் எவ்வித மாறுதல்களும் இல்லாமலும் அதன் புனிதத்தன்மையைப் பேணியும் சவூதி அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment