9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட‌ சுஹைல் பிணையில் விடுவிப்பு : சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, July 17, 2025

9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட‌ சுஹைல் பிணையில் விடுவிப்பு : சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் நடவடிக்கை

வெறும் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் தெஹி­வளை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட 21 வய­து­டைய மாவ­னெல்லை, கிரிந்­தெ­னிய பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் சுஹைல் எனும் இளை­ஞனை பிணையில் விடு­விக்க கல்­கிசை நீதிவான் நீதி­மன்றம் நேற்றுமுன்தினம் (15) உத்­தரவிட்­டது. 

கல்­கிசை மேல­திக நீதிவான் ஹேமாலி ஹால்­பந்­தெ­னிய இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்தார். 

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் எந்த குற்­றமும் புரி­ய­வில்லை என விசா­ர­ணையில் உறுதி செய்­யப்பட்­டுள்­ள­தாக தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனு­ராத ஹேரத், கல்­கிசை மேல­திக நீதிவான் ஹேமாலி ஹால்பந்தெ­னி­ய­வுக்கு கடந்த 9ஆம் திகதி அறி­வித்­தி­ருந்தார்.

இதன்­போது திறந்த மன்றில் பொலி­ஸாரின் நட­வ­டிக்­கையை கடுமை­யாக சாடிய நீதிவான், கடந்த 2025 மார்ச் 27ஆம் திகதி குறித்த விசா­ர­ணை­களின் கோவை சட்டமா அதி­ப­ருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலி­ஸாரே அறி­வித்­த­தா­கவும், அவ்­வா­றான பின்­ன­ணியில் சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை இல்­லாமல் பயங்கரவாத தடை சட்­டத்தின் கீழ் பிணை­ய­ளிக்கும் அதி­கரம் நீதிவா­னுக்கு இல்லை என கல்­கிசை மேல­திக நீதிவான் கடந்த 9ஆம் திகதி சுட்­டிக்­காட்­டினார்.

இந்த நிலை­யி­லேயே விளக்­க­ம­றி­ய­லில் ­வைக்­கப்­பட்­டுள்ள மொஹம்மட் சுஹைல் எனும் இளைஞன் குறித்த வழக்கு நேற்று கல்கிசை மேல­திக நீதிவான் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது சுஹைல் திறந்த மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

இதன்­போது சுஹை­லுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கீத்ம பெர்ணான்டோ­வுடன் சமூக நீதிக்­கான சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பின் சட்­டத்­த­ர­ணிகள் ரஷாத் அஹமத், இல்ஹாம் ஹஸ­னலி, எம்.கே.எம். பர்ஸான் ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

இதன்­போது சட்டமா அதிபர் சார்பில் சொலி­சிட்டர் ஜெனரால் விராஜ் தயா­ரத்­னவின் கையொப்­பத்­துடன், சட்டமா அதி­பரின் ஆலோ­சனை மன்றில் பொலி­ஸாரால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

அதனை கருத்தில் கொண்டே நீதிவான் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணை­களில் சுஹைலை விடுவித்ததுடன் அவரது வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்தார். 

அதன்படி இவ்வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Vidivelli

No comments:

Post a Comment