(எம்.வை.எம்.சியாம்)
மின் துண்டிப்பை மேற்கொண்டு மிஹிந்தலை விகாரையை ஒரு நாளாவது இருளில் வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டது யார்? இது அரசியலமைப்பு மீறலாகும். புனித பூமியில் மின்சாரத்தை துண்டிக்கவும், தனியாருக்கு சொந்தமான வீடொன்றில் விழாவொன்றை நடத்தி மின் கட்டணம் செலுத்தாமல் அங்கு மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்கிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? இதற்கான காரணத்தை தேடிப்பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரைக்கு சென்றிருந்தபோது, மிஹிந்தலை விகாரையின் மின் பட்டியலை செலுத்தியமை தொடர்பில் மிஹிந்தலை விகாராதிபதியுடன் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மிஹிந்தலை விகாரையின் மின் துண்டிப்புக்கு எம்மால் தற்காலிகமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதேபோன்று பெருமையடைகிறோம். இருப்பினும் இது ஸ்திரமான, நிலையான தீர்வாக கருத முடியாது.
ஆட்சியாளர்கள் தொடர்பில் நாட்டு மக்களிடத்தில் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. எதிர்க்கட்சிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகள் வரையறுக்கப்பட்டவை. இருப்பினும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நாட்டுக்கு தேவையான எம்மால் முடியுமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம். இதனை நாம் பல தடவைகள் நிருப்பித்து காட்டியுள்ளோம்.
மின் துண்டிப்பை மேற்கொண்டு ஒரு நாளாவது இருளில் வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டது யார்? என்பதை தேடிப்பார்க்க வேண்டும். இது அரசியலமைப்பு மீறலாகும்.
இவ்வாறான புனித பூமியில் மின்சாரத்தை துண்டிக்கவும், தனியாருக்கு சொந்தமான வீடொன்றில் விழாவொன்றை நடத்துவதற்கு மின் கட்டணம் செலுத்தாமை தொடர்பிலும் அங்கு மின்சாரத்தை துண்டிக்காமல் இருந்தமைக்கான காரணத்தை தேடிப்பார்க்க வேண்டும்.
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? இவ்வாறு இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்பட முடியாது. நாம் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். யார் இந்த மின் துண்டிப்பை மேற்கொண்டது? இதன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்? இதன் பின்னணியில் உள்ளவற்றை வெளிக்கொணருவோம் என்றார்.
No comments:
Post a Comment