(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்று நிரூபத்தை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான நெருக்கடியின் காரணமாக தொழிலுக்குச் செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனைக் கருத்திற் கொண்டு பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்துள்ள யோசனைக்கமைய அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச உத்தியோகத்தர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்று நிரூபத்தை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் என்போருக்கு அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக எந்த தரப்பினரை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது தொடர்பான சுற்றுநிரூபம் வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment