(எம்.மனோசித்ரா)
இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்குமாறு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அச்சுறுத்துபவர்களின் பெயர்களை வெளிப்படுத்திவிட்டு அரசியலிலிருந்து விலகுவேன். எனினும் நாட்டுக்கு சேவையாற்றக் கூடும் தேசிய பொறுப்பை மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டை பொறுப்கேற்பதற்கு மாத்திரமல்ல, அதனைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் தயராகவே உள்ளோம். ஆனால் கொள்ளையர்களுடன் இணைந்து அதனை செய்ய முடியாது.
எனவே ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடைக்கால அரசாங்கத்தில் இணையாது. மாறாக இணையுமாறு எனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், அச்சுறுத்துபவர்களின் பெயர்களை வெளியிட்டு, நான் அரசியலிலிருந்து விலகுவேன்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தினை எம்மால் காட்டிக் கொடுக்க முடியாது. மக்கள் ஆணையுடனேயே நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
தற்போது ஒரு தரப்பினர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பறிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவியல்ல, நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தேசிய பொறுப்பை மக்கள் எம்மிடம் வழங்குவார்கள் என்று நம்புகின்றேன்.
எதிர்க்கட்யிலிருந்து மக்களுக்கான சேவையை ஆற்றிக் கொண்டிருக்கும் எம்மால் அதிகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் நாட்டை கட்டியெழுப்ப முடியாதா?
ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை ஒப்படைக்க மக்கள் தயாராகி விட்டனர். எமது ஆட்சியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்று உறுதியளிக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment