இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று (03) பிற்பகல் 3.30 மணிக்கு நீக்கப்படும் என, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆர்ப்பாட்ட பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த நிலையில் சில பகுதிகளில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, நேற்று (02) மாலை 6.00 மணி முதல் நாளை (04) காலை 6.00 மணி வரையான 36 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கமைய இந்நடவடிக்கையை எடுத்ததாக இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக ஊடகங்களை முடக்கியமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர், பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுகளின் செயலாளர்களுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை தெரிவிக்க நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் கட்சிகளின் வழிநடத்தல் இன்றி நடத்தப்படவிருந்தன.
No comments:
Post a Comment