(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த சில தினங்களாக கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதத்தில் சிறியளவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. போக்கு வரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை மற்றும் மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை என்பனவே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதார அமைச்சின் குடும்பநல மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் 95 சதவீதமான கர்ப்பணிகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வீதம் குறைவடைந்திருந்தது. எனினும் கடந்த ஓரிரு தினங்களாக இந்த நிலைமை மாற்றமடைந்து, கர்பிணிகள் தொற்றுக்குள்ளாகும் வீதத்தில் சிறிதளவு அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது.
எனவே இதுவரையிலும் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாத கர்ப்பிணிகளை இப்போதாவது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மாத்திரமின்றி அநாவசியமாக வெளியிடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றோம்.
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எவ்வாறிருப்பினும் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதமும் சிறிதளவு அதிகரித்துள்ளது.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்களின் பாதுகாப்பை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களை அநாவசியமாக வெளியிடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்துமாறு கோரவில்லை. சுகாதார விதிமுறைகளைக் கடைபிடித்து தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பு பெற்றோருடையதாகும் என்றார்.
No comments:
Post a Comment