பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை, வரிப்பத்தான்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த மைதானப் பகுதியில் இச்சட்டவிரோதச் செயற்பாடு இடம்பெறவுள்ளதாக கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை (21) மாலை கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கஜ முத்துக்களை 10 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேக நபர்கள் முயன்றுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக் கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி.வேவிட விதான வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப் படையின் தலைமையதிகாரி மெரில் டயஸ் தலைமையிலான அதிரடிப் படையினர் குறித்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு 45, 50 வயது மதிக்கத்தக்க மல்வத்தைப் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் உட்பட வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சந்தேக நபர்கள் மூவர் மற்றும் சான்றுப் பொருட்கள் யாவும் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment