மெக்சிகோவில் கடும் மழையை அடுத்து மருத்துவமனைக்குள் செவ்வாய்க்கிழமை (7) வெள்ள நீர் புகுந்ததில் குறைந்தது 17 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஹிடல்கோ மாநிலத்தின் டுலா நகரில் உள்ள மருத்துவமனையில் வெள்ளம் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் கொவிட்-19 நோயாளர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு ஒட்சிசன் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மீட்பாளர்களால் சுமார் 40 நோயாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை மாநில ஆளுநரை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் மூழ்கியுள்ளது.
தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஆளுநர் ஒமர் பயத் பின்னர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளின் அவரச செயற்பாடுகளில் மாநில நிர்வாகம் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அனர்த்தத்தை கையாளும் மீட்புக் குழுவுக்கு உதவியாக இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பற்றி தாம் கவலை அடைவதாக மெக்சிகோ ஜனாதிபதி அன்ட்ரெஸ் மனுவேல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்தார்.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் முகாம்களுக்கு அல்லது உறவினர் அல்லது நண்பர்கள் வீடுகள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாநிலம் எங்கும் 30,000 க்கும் அதிகமானவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment