பிரான்சிலில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸும் ஒன்று.
அங்கு ஏற்கனவே கொரோனா வைரஸின் 3 அலைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4 ஆவது அலை எந்த நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மெக்ரொன் தலைமையிலான அரசு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியாக சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பொலிஸ் அதிகாரிகளை போராட்டக்காரர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
பொலிஸார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர். தடியடியும் நடத்தினர். இதனால் பாரீஸ் நகரமே கலவர பூமியாக காட்சியளித்தது.
No comments:
Post a Comment