திருகோணமலை மாவட்டத்தில் 12 குளங்களின் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பம் - சிறு போகத்திற்கு அவசியமான உரம் களஞ்சியங்களில் உள்ளது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

திருகோணமலை மாவட்டத்தில் 12 குளங்களின் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பம் - சிறு போகத்திற்கு அவசியமான உரம் களஞ்சியங்களில் உள்ளது

திருகோணமலை மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய சமன் தர்சன பாண்டிகோரளவின் தலைமையில் நடைபெற்றது.

இம்முறை பெரும் போகத்தில் அதிகளவான பரப்பில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் மூலமாக கடந்த காலங்களிலும் பார்க்க அதிகமான நெல் விளைச்சல் விவசாயிகளுக்கு கிடைக்கப் பெற்றது. அத்துடன் அரசாங்கத்தினுடைய நெல் கொள்வனவு செயல் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு உயரிய விலை கிடைக்க பெற்றதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியிடைய உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல் எனும் எண்ணக்கருவிற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான அனைத்து பிரதேசங்களிலும் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு மாவட்டத்திற்கு அவசியமான உற்பத்திகளை பெற்றுக் கொள்வதுடன் மேலதிக உற்பத்திகளை ஏனைய மாவட்டங்களுக்கும் அதேபோன்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்கிவருவதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் நீர்ப்பாசன செழுமை திட்டத்தின் கீழ் 12 குளங்களின் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட குளங்களின் வேலைகள் எதிர்வருகின்ற தினங்களில் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் நீர் பிரச்சினையின்றி தங்களுடைய உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.

அத்துடன் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட உரமானியம் பெரும் போகத்தில் 48914 விவசாயிகளுக்கு 16609 மெட்ரிக் தொன் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் இதன்போது திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் (உர விநியோகம்) பிரேமரத்ன தெரிவித்தார்.

சிறு போகத்திற்கு அவசியமான உரம் களஞ்சியங்களில் தற்போது காணப்படுவதாகவும் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட உடன் அவற்றை உரிய முறைப்படி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, மரமுந்திரிகை, தெங்கு அபிவிருத்தி உட்பட பல்வேறு விவசாய செய்கைகளின் போக்கு பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை இதன் போது அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் குறித்த பிரச்சினைகளை எதிர் வருகின்ற காலங்களில் உரிய திணைக்களங்களை தொடர்புபடுத்தி ஒருங்கிணைப்புச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment