நாங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து, நீதிமன்றங்களுக்குச் சென்று, நடு வீதியில் போராட்டம் நடாத்தி இன்றைய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம் - அமைச்சர் இந்திக அனுருத்த - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

நாங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து, நீதிமன்றங்களுக்குச் சென்று, நடு வீதியில் போராட்டம் நடாத்தி இன்றைய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம் - அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர்

பிணைமுறி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மிக விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் தலைவர் என்ற வகையில் மேற்கொண்ட மிகச்சிறந்த தீர்மானம் ஆகும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

இன்று நடைமுறையில் உள்ளது மக்கள் நலன் அரசாங்கம் என்றும், அன்று நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது சிறைத் தண்டனை அனுபவித்து நீதிமன்றங்களுக்குச் சென்று நடு வீதியில் போராட்டம் நடாத்தி இன்றைய அரசாங்கத்தை உருவாக்கியதாகவும், அரசாங்கம் தொடர்பாக பொதுமக்கள் 100% நம்பிக்கையுள்ளவர்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் தரிசு நிலங்களாக இருந்த நாடு இன்று விளை நிலங்களாக மாறி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் களனி பிரதேச செயலகப் பிரிவில் எகொட ஈரியவெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்படும் புதிய வீட்டிற்கு அடிக்கல் நடும் வைபவத்தில் இன்று (06) கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு பேசினார்.   

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனையின் படி, பிரதமர் மற்றும் வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் "உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த வேலைத் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 14,022 வீடுகள் நாடு பூராகவும் கட்டப்படும் அதேவேளை இரண்டாம் கட்ட நிர்மாணமும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாடு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, களனிப் பிரதேச சபையின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள பிரசன்ன மற்றும் ஒஷான் நந்தசிறி, களனி உதவி பிரதேச செயலாளர் அருணி சோமரத்ன, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கம்பஹா மாவட்ட முகாமையாளர் அணில் பிரியந்த உட்பட ஏராளமான அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment