(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்காக சம்பள நிர்ணய சபையின் ஊடாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து கம்பனிகள் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தால் அதனை நீதிமன்றங்கள் விசாரணைக்குக்கூட எடுத்துக் கொள்ளாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழ் ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் விஜித் ஹேரத் உரையாற்றும்போது, 900 ரூபா அடிப்படைச் சம்பளம் மற்றும் 100 ரூபா வாழ்கைச் செலவு என்ற விடயத்துக்கு முதலாளிமார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவ்வாறான நிலையில் அரசாங்கம் இதனை வர்ததமானி படுத்திய பின்னர் அவர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றால் என்ன செய்வது? என கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவே நாம் முற்பட்டோம். ஆனால், அதற்கு கம்பனிகள் இணக்கம் வெளியிடாமையால் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஆட்சேபனை தெரிவித்து கம்பனிகள் நீதிமன்றம் செல்வதில் எந்த பயனுமில்லை. இது தொடர்பிலான வழக்கை நீதிமன்றகள் விவாதத்திற்குகூட எடுத்துக் கொள்ளாது. வர்த்தமானி வெளியானதும் இந்த விடயம் நடைமுறைக்கு வரும் என்றார்.
No comments:
Post a Comment