ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் போர்க் குற்ற உள்ளக விசாரணை பிரேரணையில் இருந்து இலங்கை நீங்கியதால் அடுத்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றினை நிறைவேற்றவுள்ளதாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் நகர்வுகள் இலங்கைக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கப் போகின்றது எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சபையில் நேற்று வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் சில காரணிகளை குறிப்பிட்டேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாங்கீன் மூனுடன் இணங்கிய வாக்குறுதிகள் குறித்து தெரிவித்தேன். இதில் உள்ளக விசாரணைக்கு அவர் இணங்கினார். ஆனால் ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் எமது ஆட்சியில் நாம் உள்ளக விசாரணைக்கு இணக்கம் தெரிவித்தோம். எனினும் இப்போது மீண்டும் இந்த அரசாங்கம் பிரேரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்னவென்றால் நாம் போர்க் குற்ற உள்ளக விசாரணை பிரேரணையில் இருந்து நீங்கியதால் அடுத்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றினை நிறைவேற்றவுள்ளதாக அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
எமக்கு எதிராக பிரேரணை ஒன்று வருதென்றால் அது மிக பாரதூரமான விடயமாகும். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் எமக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் நாம் பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோம். இந்த பொருளாதார தடைகளுக்கு முகங்கொடுக்க முடியாத காரணத்தினால்தான் 2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றார். எனவே இப்போதுள்ள நிலையில் நாட்டினை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment