தெற்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடந்த சில நாட்களாக நீடிக்கும் உக்கிர மோதல்களை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நீடிக்கும் நிலையிலேயே மோதலும் அதிகரித்துள்ளது. பதற்றம் கொண்ட ஹெல்மாண்ட் மாகாணத்தின் லஷ்கார் காஹ் நகர் மீது தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதை அடுத்து ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு உதவியாக அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தியது.
இந்த மோதல் தீவிரம் அடைந்த நிலையில் உள்ளூர் மக்கள் மோட்டார் சைக்கிள்கள், டெக்சிகள் மற்றும் பஸ் வண்டிகளில் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
“மோதல்கள் காரணமாக இதுவரை 5,100 க்கும் அதிகமான குடும்பங்கள் அல்லது 30,000 பேர் வரை வெளியேறியுள்ளனர்” என்று ஹெல்மாண்ட் அகதிகள் திணைக்கள பணிப்பாளர் செயித் முஹமது ரமின் தெரிவித்துள்ளார்.
அண்டை வீட்டின் மீது மோட்டார் குண்டு தாக்கி இரு பெண்கள் கொல்லப்பட்டதை அடுத்து தாம் வெளியேறியதாக உள்ளூர் குடியிருப்பாளரான ஹெக்மதுல்லா தெரிவித்துள்ளார். ஐந்து மாவட்டங்களில் தற்போது மோதல் இடம்பெற்று வருவதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment