சீனாவில் கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளனர்.
சீனாவில் நேற்றுமுன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்றுமுன்தினம் தொடங்கி 8 நாட்களுக்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படியே கொரோனா தொற்றுக்கு மத்தியில் மக்கள் ஆர்வமுடன் அங்குள்ள சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாங்ஷி மாகாணம் தையுவான் நகரில் உள்ள கேளிக்கை பூங்காவில் நேற்றுமுன்தினம் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர்.
அப்போது அங்கு பனி சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment