கொவிட்-19 காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என மலேசிய முஸ்லீம் அமைப்பொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலேசியாவை சேர்ந்த எம்ஏபிஐஎம் என்ற அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. முஸ்லீம் சிறுபான்மை குழுவினருக்கு எதிரான நிந்தைகள் இலங்கை தேசத்தின் எதிர்கால இணக்கமான சகவாழ்விற்கு உகந்தவையல்ல என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நியுஸ்டிரெய்ட் டைம்சில் வெளியாகியுள்ள கடிதத்தில் மலேசிய அமைப்பின் தலைவர் மத ரீதியிலான தவறான எண்ணங்களிற்கு அனுமதியளிப்பது உலகை சூழ்ந்துள்ள சுகாதார நெருக்கடிக்கு தீர்வு காண உதவாது என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசினை சிலர் சில மதங்களை பின்பற்றுபவர்களை இலக்கு வைப்பதற்கு பயன்படுத்துவது குறித்தும் சமூகங்களை மத அடிப்படையில் பிரிப்பது குறித்தும் நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். மத ரீதியான வெறுப்புணர்வை சகித்துக்கொள்ளக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்களின் உடலை புதைக்கும் நடவடிக்கைக்கு மாறாக இலங்கையில் முஸ்லீம்களின் உடல்களை அரசாங்கமே எரிப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கொவிட்-19 காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை கையாளும் நடைமுறை இதுவல்ல என தெரிவித்துள்ள அவர் உரிய மத ரீதியிலான உரிமைகளிற்கு உரிய மரியாதையை வழங்காமல் அவர்களின் உடல்களை எரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க வேண்டிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment