(செ.தேன்மொழி)
அரிசி தட்டுபாடு இன்று உச்சநிலையை அடையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அரிசி விநியோகத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு யாருடைய அனுமதியின் பிரகாரம் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசிக்கான தட்டுபாடு உச்சக்கட்டத்தை அடையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தை கவனம் செலுத்துமாறு குறிப்பிட்டால் இவர்கள் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை.
ஜனாதிபதி கோத்தாபயவுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, எதிர்வரும் 9 மாதங்கள் வரை நாட்டுக்கு தேவையான அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையாவது உரிய முறையில் பெற்று விநியாகிக்கலாமே. இதனை விடுத்து அரிசி ஆலையாளர்களிடம் அதிகாரத்தை காண்பித்து அரிசி கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றமையினாலேயே இன்று அரிசிக்கான தட்டுபாடு அதிகரித்து வருகின்றது.
அரிசி விநியாகத்தை உரிய முறையில் முன்னெடுப்பது என்றால் சிறு வர்த்தகர்களைப் போன்று மேல் நிலை வர்தகர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான வேலைத்திட்டத்தின் ஊடாகவே அதனை செயற்படுத்த முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே கூட்டுறவு சங்கத்தினூடாக 'சக்தி' அரிசி விநிகோத்தை நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்படுத்தியிருந்தோம். இதனால் மக்களுக்கு சாதாரண விலையில் தட்டுபாடின்றி அரிசி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்.
இந்நிலையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பினர் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் கூட்டுறவு சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த அரிசி விநியோகத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு அறிவித்துள்ளனர். இந்த அறிவித்தலை விடுத்ததற்கான காரணம் என்ன? யாருடைய ஆலோசனையின் பெயரில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது என்பது தொடர்பில் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment