(இரா.செல்வராஜா)
கொவிட்19 வைரஸ் காணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதனால் ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டன. இதனால் ரயில்வே திணைக்களத்திற்கு 900 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனோ வைரஸ் காரணமாக ரயில் சேவைகள் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கிக் கிடந்தன. எனினும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது, அத்துடன் ரயில் எஞ்சின்களும் பராமரிக்கப்பட்டன என ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
ரயிவே பிரதி பொது முகாமையாளர் மேலும் தகவல் தருகையில், ரயில்வே திணைக்களத்தினால் நாளாந்தம் சுமார் 450 ரயில் சேவைகள் நடாத்தப்பட்டன. குறுகிய மற்றும் நீண்ட ரயில் சேவைகளையே நடாத்தப்பட்டு வந்தன.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை உட்பட பல பகுதிகளுக்கு தபால் ரயில் சேவைகளும் நடாத்தப்பட்டது. இதைத்தவிர சரக்கு ரயில் சேவைகளும் நடாத்தப்பட்டன. இந்த அனைத்து சேவைகளும் கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெறவில்லை. இதனால் ரயில்வே திணைக்களத்திற்கு 900 இலட்சம் ரூபாவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது நாளாந்தம் 10 அல்லது 15 ரயில் சேவைகளே நடாத்தப்பட்டு வருகின்றது. ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவிருப்பதால் ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment