(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் 10 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வருடத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையான 4 மாதங்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 18,500 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அனைத்து மாகாணங்களிலும் இனங்காணப்பட்டுள்ள நோயாளர்கள் தொடர்பில் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது.
மேல் மாகாணம்
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாட்டங்களில் பெருமளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த 4 மாதங்களில் கொழும்பில் 2685 பேரும், 1580 பேரும், களுத்துறையில் 913 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணம்
மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் 1079 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 427 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 124 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தென் மாகாணம்
தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் 940 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 255 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 351 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
வட மாகாணம்
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1701 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 104 பேரும், மன்னார் மாவட்டத்தில் 116 பேரும், வவுனியாவில் 227 பேரும், முல்லைத்தீவில் 62 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 1983 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 279 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2134 பேரும், கல்முனையில் 802 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணம்
வடமேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டத்தில் 643 பேரும், புத்தளத்தில் 331 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
வட மத்திய மாகாணம்
வட மத்திய மாகாணத்தில் அநுராதபுரம் மாவட்டத்தில் 305 பேரும், பொலன்னறுவையில் 182 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணம்
ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 353 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 576 பேரும், கேகாலை மாவட்டத்தில் 348 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment