பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரியும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பட்டார்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வட மாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் குறித்த பேரணி இடம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பஸார் பகுதியைச் சென்றடைந்தது.
பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் குறித்த பேரணியில் சென்றவர்கள் ஒன்று சேர்ந்தனர். இதன்போது பேரணியில் கலந்துகொண்ட அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவதுடன் மிகவும் கடினமான வகையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றார்கள்.
குறிப்பாக யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்கள் அரசியல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.
அரசியல் கைதிகளாகக் கைது செய்யப்பட்டு ஆண்டாண்டு காலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள்.
அவர்களது நெடுங்கால தடுத்து வைப்பினால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள்.
குறிப்பாக குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்கள் பல இன்னல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் சிறையில் நீண்ட காலம் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரசியல் கைதிகளின் உறவுகள் கண்ணீர் மல்க தமது கோரிக்கையை முன்வைத்ததோடு, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கக் கோரியும், அரசியல் கைதிகளான தமது உறவுகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைத்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களையும் சேர்ந்த அரசியல் கைதிகளின் பிள்ளைகள், உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபை உறுப்பினர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு நிருபர் தவசீலன்
No comments:
Post a Comment