எஸ்.எம்.எம்.முர்ஷித்
சமாதான நீதவான்கள் சமூகத்தில் காவலர்களாக செயற்பட வேண்டியதுடன் இன நல்லுறவை வளர்க்கவும் பாடுபடும் அதேவேளை இன முறுகல்கள் ஏற்படும் எந்த சந்தர்ப்பத்திலும் கூடிய பங்கினை ஆற்ற முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா காத்தான்குடி பிரதேச செயலக மாநட்டு மண்டபத்தில் இன்று (03) இடம் பெற்றது.
இந்த அமைப்பின் தலைவர் பாவலர் சாந்தி முஹியித்தின் (ஜே.பி) தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் இன ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்ட வேளைகளில் இந்த அமைப்பினர் பங்களிப்பினை செய்திருப்பதையிட்டு பாராட்டுவதுடன் இம்மாவட்டத்தில் செயற்படும் ஏனைய சமாதான நீதவான்களையும் இணைத்து மக்களுக்கு நல்ல பணி செய்ய இந்த அமைப்பு முன்வர வேண்டும்.
இந்த மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்லுறவு வளர வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க இந்த சமாதான நீதவான்கள் அமைப்பு தொடரந்தும் கரிசனை காட்ட வேண்டும்.
இந்த அமைப்பினால் மக்களின் நலன் கருதி எடுக்கப்படுகின்ற நல்ல முயற்சிகளுக்கு எனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றார்.
இந்த நிகழ்வில் இந்த சமூக மயம்பாட்டு மையத்தின் உறுப்புரிமை கொண்ட சமாதான நீதவான்களுக்கு கடமைப் பை மற்றும் கடமை அடையாள அட்டை என்பனவும் அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் மு. உதயஸ்ரீதர், மண்முனை பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:
Post a Comment