பெல்மதுளையிலுள்ள தேதுனு டெக்ஸ் எனும் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை தொடர்பில் இரு ஆசிரியர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேசகர தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, இரத்தினபுரி பகுதியில் உள்ள ஏலம் விடப்படும் இடமொன்றில் தகவலறிபவர்களைப் பயன்படுத்தி பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த ஏல விற்பனை நிறுவனத்திலிருந்து மேற்குறிப்பிட்ட திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாணிக்கக்கல் ஒன்று ஏலத்திற்காக விடப்பட்ட நிலையில், குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சம்பவத்திற்கான வேர் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் இருவர் ஆசிரியர்கள் என்பதோடு மற்றும் இருவர் முன்னாள் இராணுவ வீரர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய திருடப்பட்ட சுமார் ரூ. 1 ½ கோடி மதிப்புள்ள 604 மாணிக்க கற்கள், ரூபா 447,000 பணம் மற்றும் ரூபா 50 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் திருட்டுக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர்களில் ஐவரில் இருவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, ஏனையவர்கள் கிரிந்திவெல, லுணுகம்வெஹர மற்றும் ஹொரணையைச் சேர்ந்தவர்களாவர்.
பெல்மதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment