எதிர்வரும் ஐந்து வருட காலத்தை இலக்காகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை இன்றுள்ள நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினா் தயாசிறி ஜயசேகர நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 02 ஆம் வாசிப்பு மீதான 05 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது.
நாடு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடன்களில் இறுகிபோயுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையிலுள்ளது. பொருளாதார மாற்றுத் திட்டமொன்று தற்போது அவசியமாகின்றது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் 29 கடன் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
என்டர்பிரைஸ் சிறிலங்கா கடன் மூலம் எந்த வர்த்தகத்தையும் முன்னேற்ற முடியாது. இதன் மூலம் புதிய தொழில் முயற்சியாளர்கள் எத்தனை பேர் உரிவாகியுள்ளார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன். மேலும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று எமது மக்களை கடனாளியாக்குவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கமாகவுள்ளது.
ஏற்கனவே கடன் சுமையிலுள்ள மக்கள் மேலும் கடனாளியாவதற்கு அரசாங்கத்தின் திட்டங்கள் வழிவகுக்கின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ன? வடக்கு, கிழக்கிலேயே மக்கள் அதிகளவில் நுண்கடன்களைப் பெற்றுள்ளனர்.
2017 இல் மாத்திரம் 263 பில்லியனை 39 நிறுவனங்கள் மூலமாக கிராமிய மக்கள் நுண்கடனாக பெற்றுள்ளனர். இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெண்களே. இதனால் நுண்கடன் தொடர்பில் இலங்கைக்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட வேண்டுமென ஐ.நா வலியுறுத்தி வருகிறது. புதிய வர்த்தகர்களை உருவாக்குகின்றோம் எனும் போர்வையில் நாட்டில் மேலும் கடனாளிகளை உருவாக்கும் செயற்பாடுகளே இடம்பெற்று வருகின்றன என்றார்.
No comments:
Post a Comment