அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணையை ஆரம்பிக்க செய்ய கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று (06) அழைக்கப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணை செய்ய தீர்மானித்த நீதிபதி அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அந்த திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment