மொடர்னா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகள் : சமூக வலைத்தளங்களுக்கு வலைவீசும் பொலிஸார்..! - News View

About Us

About Us

Breaking

Thursday, July 22, 2021

மொடர்னா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகள் : சமூக வலைத்தளங்களுக்கு வலைவீசும் பொலிஸார்..!

(எம்.மனோசித்ரா)

சமூக வலைத்தளங்கள் ஊடாக மொடர்னா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுவதாக கண்டி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் கண்டி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அண்மைக் காலமாக இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் போது சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் அவை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

முகப்புத்தகம், மெசென்ஜர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக மொடர்னா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாக நேற்று புதன்கிழமை கண்டி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது கண்டியை அண்மித்த பகுதிகளில் மொடர்னா தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தடுப்பூசி தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இழக்கப்படும் என்பதால், இது தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு கண்டி பொதுவைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனது முறைப்பாட்டின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மொடர்னா தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் அதில் நனோ தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகவும் கண்டி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக குற்ற விசாரணைப் பிரிவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment