தனிமைப்படுத்தலினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறு இலட்சம் நிதியுதவியளித்த மீராவோடை அல் ஹிதாயா பழைய மாணவர் சங்க கத்தார் கிளை - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

தனிமைப்படுத்தலினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறு இலட்சம் நிதியுதவியளித்த மீராவோடை அல் ஹிதாயா பழைய மாணவர் சங்க கத்தார் கிளை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொரோனா அதிகரிப்பினால் தனிமைப்படுத்தப்பட்ட ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலைப் பிரதேசங்களில் வறிய குடும்பங்களுக்கு மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க கத்தார் கிளையினால் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

கத்தாரில் தொழில் புரியும் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பழைய மாணவர்களின் சுமார் ஆறு இலட்சத்தி இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவியில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தனிமைப்படுத்தலுக்குள்ளான பதுறியா நகர் கிராமத்தில் ஐம்பது குடும்பங்களுக்கும், மாஞ்சோலை கிராமத்தில் ஐம்பது குடும்பங்களுக்கும், மீராவோடை மேற்கில் 91 குடும்பங்களுக்கும், மீராவோடை கிழக்கில் 90 குடும்பங்களுக்குமாக மொத்தம் 281 குடும்பங்களுக்கென 562,000 ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச ரீதியாக பயனாளிகள் தெரிவின் போது, மிகத்தேவையுடைய குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களில் அதிக குழந்தைகள் உள்ள, தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்ட, நோய்களினால் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாத குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இரண்டாயிரம் ரூபா பணமாக வழங்கி வைக்கப்பட்டது

அத்துடன், கொரோனா தொற்றினால் அண்மையில் மரணமான மீராவோடையைச் சேர்ந்த சகோதரரின் குடும்பத்தினருக்கு இருபதாயிரம் ரூபாவும், பயணத்தடை காரணமாக பாதிப்படைந்த செம்மண்ணோடைப் பிரதேச மக்களின் நன்மை கருதி செம்மண்ணோடை பள்ளிவாயல்கள், பொது நிறுவனங்களின் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்படும் நிவாரண நிதி சேகரிப்புக்கு இருபதாயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வழமையாக நிவாரணப் பணிகளின் போது உலருவுணவுகளே வழங்கப்படுவதனைக் கருத்திற்கொண்டு, வேறு தேவைகளுக்கு உதவும் வகையில் நிதியாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பணியினைச் சிறப்பாக நடாத்தி முடிக்க மிகக்குறுகிய கால வேண்டுகோளில் ஒரு வார காலத்தில் நிதியுதவிகளை வழங்கிய கத்தாரிலுள்ள மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பழைய மாணவர்கள், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நிதியினைச் சேகரித்த “கொரோனா நிதி சேகரிப்புக்குழு", சிறப்பான முறையில் பொருத்தமான பயனாளிகளை அடையாளப்படுத்தி நிதியினைப் பகிர்ந்தளித்த “மெடோ" அமைப்பினர் மற்றும் பிரதேச ரீதியான குழுக்கள் அனைவருக்கும் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க கத்தார் கிளை சார்பாக அதன் தலைவர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க கத்தார் கிளை பாடசாலையின் உயர்தர கணித, விஞ்ஞானப்பிரிவு வளர்ச்சி, சாதாரண தர அடைவு மட்டத்தை அதிகரித்தல் போன்ற கல்வி வளர்ச்சியினைப் பிரதான இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதுடன், இவ்வாறான அசாதாரண நிலைமைகளின் போதும் தம் அங்கத்தவர்களின் நிதியுதவி மூலம் தம்மாலான உலருணவு வினியோகம், நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment