முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த 15 வயது சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தமை மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது. மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிறுமிக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மலையக மக்களின் வறுமை நிலையை ஒரு சிலர் தவறான முறையில் பயன்படுத்தி தரகர்களாக செயற்பட்டு கல்வி கற்க வேண்டிய சிறுவர்களை வேலைக்கமர்த்தி வருமானம் பெறுகின்றனர்.
இவ்வாறு தங்களுடைய தரகு பணத்தை பெறும் தரகர்கள் அந்த சிறுவர்கள் பற்றியோ அவர்களின் பெற்றோர் பற்றியோ நினைத்துப் பார்ப்பதில்லை. இவ்வாறான நிலை ஏனைய சிறுவர்களுக்கும் இடம்பெற்றிருக்கின்றது.
இது தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை நீதித்துறை வழங்கும்.
அத்தோடு, மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிறுமிக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment