ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்கள் குறித்து அண்மைக்காலமாக தீவிர கண்காணிப்புகள் முன்னெடுக்கபட்டிருந்தன. இதன் பிரகாரம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணினி குற்றங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவு முன்னெடுத்து வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் பிரகாரமே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் புறக்கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ராஜகிரிய பகுதியிலும் இதே போன்று நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றிய 26 வயதுயை மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி 23 வயதுடைய மற்றுமொரு நபர் கண்டி - பூஜாப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றிய 39 வயதுடைய நபர் பிலியந்தலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய 31 வயதுடைய நபர் கம்பஹா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று மற்றுமொருவரின் முகநூல் கணக்குக்குள் நுழைந்து ஆபாச படங்களை ஏற்றிய 31 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் குறித்து கண்காணிப்பு தொடர்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment